
காபூல் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், வரும் 30-ம் தேதி வரை அமெரிக்க தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் ஆப்கானியர்கள் 60 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான நிலையம் அருகே நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில், அந்த அமைப்பும் அதனை உறுதி செய்துள்ளது. நிலைமை மோசமடைந்தாலும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகளை நிறுத்தப் போவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், வருகிற 30-ம் தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
காபூல் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த பயங்கரவாத தாக்குதல் நடக்க ஒருபோதும் அனுமதித்திருக்ககூடாது என தெரிவித்தார். மேலும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தை அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் கையாள்வதையும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments