
தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் மருத்துவர் தினம் உருவான வரலாறு என்னவென்று தெரிந்துகொள்வோம்.
உலகம் முழுவதும் ஓர் உன்னதமானத் தொழிலாகப் போற்றப்படுகிறது, மருத்துவம். உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டெனில், அவர் மருத்துவராகத்தான் இருக்க முடியும். சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் செவிலியர், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்ற பலரது கூட்டு முயற்சி அடங்கியுள்ள போதிலும், அந்தக் குழுவை வழிநடத்திச் செல்பவர் மருத்துவர்தான். அந்த வகையில் இந்தியா, பல பிரபலமான மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. அவர்களில் ஒருவரான புகழ்பெற்ற மருத்துவராகவும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் இருந்த பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய்.
பீகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள பாங்கிபோர் என்ற ஊரில் 1882-ஆம் ஆண்டு, ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தவர், பி.சி.ராய். ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட அவர், மருத்துவப்பணிக்காக தன்னையே அர்ப்பணித்தவர். தேசப்பிதா மகாத்மாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த பி.சி.ராய், அவருடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியுள்ளார்.

தனது வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட வழங்கிய மருத்துவர் பி.சி.ராய், முதலமைச்சராக இருந்த காலத்திலும் ஏழைகளுக்கு நாள்தோறும் இலவச மருத்துவம் பார்த்தவர். ராயின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
பி.சி.ராய்க்கு புகழாரம் சூட்டும் வகையில், 1991ஆம் ஆண்டு முதல் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனாலும், மருத்துவர் பி.சி.ராயின் நினைவாக, இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments