
மருத்துவர்களின் அளப்பரிய சேவையையும் அர்ப்பணிப்பையும் உலகமே உணர்ந்தது இந்த கொரோனா காலக்கட்டத்தில்தான் என்றால் மிகையல்ல. அப்படி கொரோனா காலத்தில் சேவையாற்றிய 8 மாத கர்ப்பிணி மருத்துவர், அந்த கொடிய வைரசால் தனது இன்னுயிரை நீத்தார். அவர் ஆற்றிய சேவைகளால் இப்போதுவரை பலரின் மனதில் வாழும் அந்த மருத்துவர் பற்றி, இந்த மருத்துவர் தினத்தில் பார்க்கலாம்.
மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணியிடமாற்றத்தில் வந்தவர் சண்முகப்பிரியா. தேனி சின்னமனூர் அருகே, ஓடப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த இவர், கருவுற்ற சூழலிலும், கொரோனா சூழலை கண்டு அஞ்சாமல், தனது மருத்துவச் சேவையை தொடர்ந்துவந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த சூழலில் கடந்த மே 5-ஆம்தேதி பேறுகால விடுப்பு பெற்றார். ஆனால் அதற்கு முன்பே ஏப்ரல் 30 ஆம்தேதி காய்ச்சல் ஏற்பட்டநிலையில், கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
90%க்கு மேல் நுரையீரலில் தொற்று பாதித்தநிலையில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சண்முகப்பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மே 5-ஆம்தேதி சண்முகப்பிரியாவின் வயிற்றிலிருந்த 8 மாத சிசு உயிரிழந்தது. மருத்துவர்களின் முயற்சி பலனின்றி மருத்துவர் சண்முகப்பிரியாவின் உயிரும் அன்று மாலையே பிரிந்தது.
கர்ப்பிணியான மருத்துவரின் மரணத்தை இப்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாமல் கலங்கிக்கொண்டிருக்கிறார்கள் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களும், சக ஊழியர்களும்.சிகிச்சை பெற வரும் நோயாளிகளும் சண்முகப்ரியாவை நினைவுகூர்ந்து கலங்குவதாக கூறுகிறார் இங்குள்ள மருத்துவர் நாகராஜா.
பேறுகால விடுப்பு எடுத்த அதே மே 5-ஆம்தேதி உலகை விட்டே மறைந்துவிட்டார் சண்முகப்பிரியா. குழந்தையோடு வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. தன்னலம் கருதாமல், தன்நிலை கருதாமல் மருத்துவச் சேவை புரிந்த சண்முகப்பிரியா, கண்ணைவிட்டு மறைந்தாலும், தனது சேவையால் மக்களின் கருத்தைவிட்டு மறையவில்லை என்று சொல்கிறார்கள் சக பணியாளர்களும், பொதுமக்களும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments