
2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் (Annie Ernaux) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளை தனது எழுத்தின் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருவதற்காகவும், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் இலக்கியப் பங்காற்றி வருவதற்காகவும் அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தற்போது 82 வயதாகும் ஆனி எர்னாக்ஸ், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தனது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதும் துணிச்சலான எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்படுகிறார்.
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல், இலக்கியம், உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கு இதுவரை, மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் (மனிதனின் மூதாதையர்களான நியாண்டர்தால்கள் போன்ற உயிரினங்கள்) மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று அறிஞர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments