
குற்றவாளிகள் மற்றும் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டவர்களின் அடையாளங்களை சேகரிக்க அனுமதி அளிக்கும் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 1920ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கைதிகள் அடையாள சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசால் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நடைபெற்றது. இந்த மசோதா, குற்றவாளிகள் மற்றும் குற்றம்சாட்டப்படுபவர்களின் கைரேகைகள் மற்றுமின்றி ரத்தம், டி.என்.ஏ, கருவிழி உள்ளிட்ட அனைத்து வகையான உயிரியல் மாதிரிகளையும் சேகரிக்க காவல்துறைக்கு அதிகாரமளிக்கிறது. விவாதத்தின்போது `இந்த மசோதா கொடூரமானது’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த மசோதா சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்களின் மனித உரிமைகளை காவலனாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

தனியுரிமை குறித்த எம்.பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமித் ஷா, “இந்த மசோதா சட்டமாக்கப்படும் போது சேகரிக்கப்படும் தனி மனித தகவல்கள் பாதுகாக்கப்படும்” என உறுதியளித்தார். தொடர்ந்து மற்றொரு கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றமிழைத்தவர்கள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களை தவிர பிறர் தங்களது மாதிரிகளை தருவது கட்டாயமல்ல” என சுட்டிக்காட்டினார். மேலும் இந்த மசோதாவை பயன்படுத்துகையில் தனி மனித உரிமைகளுடன், சமுதாயத்தின் உரிமைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் இரண்டிற்கும் இடையில் ஒரு சமநிலை கடைப்பிடிக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்காகவும், குற்றங்களை குறைக்கவுமே இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகவும் அவர் கூறினார். அமித்ஷாவின் பதிலுக்கு பின்னர் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்திய செய்தி: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments