
மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
மண்டல பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு, 41 நாள் பூஜைக்குப் பின் கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜை நடத்தப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணியளவில், பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் காண்பார்கள். புத்தாண்டிற்கு பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க கேரளாவில் இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள சூழலில், சபரிமலை பக்தர்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments