
இந்து மதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்தைத் தழுவியவர்களை, மீண்டும் மதம் மாற்ற வேண்டும் என்று பாஜக இளைஞர் அணியின் தேசியத் தலைவரும், எம்பியுமான தேஜஸ்வி சூர்யா அழைப்பு விடுத்துள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சனிக்கிழமையன்று ஸ்ரீ கிருஷ்ண மடத்தின் விஸ்வர்பணம் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் மதம் மாற்றுவது மட்டுமே இந்துக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி என்றும், அதில் பாகிஸ்தானின் முஸ்லிம்களும் அடங்குவார்கள் என்றும் கூறினார்.
இந்த விழாவில் பேசிய தேஜஸ்வி சூர்யா, "இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் மதம் மாற்றுவது மட்டுமே இந்துக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி. வரலாற்றின் போக்கில் சமூக, அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இம்மதத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். மக்களை இந்து மதத்திற்கு திரும்பக் கொண்டுவர ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு மடமும் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்”என்று கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தர்ம சன்சத்’ நிகழ்ச்சியில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்ல அழைப்பு விடுத்து, பல பேச்சாளர்கள் வெறுப்பு பேச்சுக்களை பேசியதாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி யதி நரசிம்மானந்த் கிரி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது, இவர் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசியதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர். இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஜிதேந்திர நாராயண் தியாகி மற்றும் பலர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments