
திருப்பதி - திருமலையில் பெய்த பெருமழையினால், மலையின் பல்வேறு இடங்களில் காட்டாறுகள் உருவாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி உள்ளது.
திருமலையில் பெய்து வரும் தொடர்மழையால், மலைப்பகுதி முழுவதும் புதிய அருவிகள் உருவாகின. தொடர்ந்து கனமழை பொழிந்ததால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு மலைப்பாதைகளில் பாய்ந்தது. கபிலி தீர்த்தத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் சில இடங்களில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால், மலைப்பாதைகள் மூடப்பட்டன.

பக்தர்கள் நடைபாதையாக செல்லும் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதைகளும் மூடப்பட்டன. உருண்டு கிடக்கும் பாறைகளை அகற்றும் பணிகளில் தேவஸ்தான பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருமலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதோடு, முன்பதிவு அலுவலகத்தில் தண்ணீர் புகுந்தது. கணினிகள் நனைந்து சர்வர்கள் முடங்கின. திருப்பதி நகரத்தையே மழைநீர் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே திருப்பதி சென்றவர்கள், ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியுள்ளனர். இதனிடையே வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி உள்ளது. அவர் யார், அவரது நிலை என்னவானது என்பன போன்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments