
கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபாலசாமி கோயிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம், அங்கு குயின்ஸ்லேண்ட் என்ற பெயரில் பொழுதுபோக்கு பூங்காவை நடத்தி வருகிறது. குத்தகை காலம் முடிந்த நிலையிலும் நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், சுமார் 3 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்துமாறு குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தொடர்புடைய செய்தி: கூட்டுறவு சங்க தலைவர் விதியை மீறினால் அதிகாரிகள் வேடிக்கை பார்க்க முடியாது: உயர்நீதிமன்றம்

இதை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நெடுநாட்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததை பயன்படுத்தி, குயின்ஸ்லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, குயின்ஸ்லேண்ட்டை அப்புறப்படுத்தி, 4 வாரங்களில் கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், குயின்ஸ்லேண்ட் நிறுவனம் வருவாய் துறைக்கு 1 கோடியே 8 லட்சம் ரூபாயையும், கோயிலுக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாயையும் இழப்பீடாக செலுத்தவும் ஆணையிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments