Advertisement

அப்படி என்னதான் மேஜிக் செய்தார் தோனி?.. 10வது ஓவருக்கு பின் ஆட்டம் மாறிப்போனது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் தோனி பேட்டிங் கூட செய்யவில்லை. இது வீரர்களின் திறமையால் கிடைத்தது இதில் தோனியின் பங்கு என்ன இருக்கு என சிலர் வேடிக்கையாகக் கூட கேட்கக் கூடும். ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் போக்கு எப்படி மாறுகிறது என்பது உற்று நோக்குபவர்களுக்கு தெரியும் ஒரு கேப்டனாக தோனியின் பங்கு.

image

அப்படி என்னதான் செய்தார் தோனி!

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 192 ரன்கள் எடுத்திருந்தாலும், துபாய் பேட்டிங் மைதானம் என்பதால் வெற்றி வாய்ப்பு சம வாய்ப்புடனே இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முக்கியமான கேட்சை தொடக்கத்திலேயே கோட்டை விட்டார் தோனி. இதுவே சென்னை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு வெங்கடேஷ் ஐயர் அதிரடி காட்ட ஆட்டம் மெல்ல மெல்ல கொல்கத்தா பக்கம் சென்றது. ஆட்டத்தின் 10வது ஓவர் வரை சென்னை அணியின் ரசிகர்கள் இருந்த மனநிலையே வேறு. வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட பாதிக்கு கீழ் சென்றுவிட்டது. அந்த அளவிற்கு கொல்கத்தா அணி தொடக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் ஆட்டம் இருந்தது. 10 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 88 ரன்கள் குவித்துவிட்டார்கள். இந்த இடத்தில் இருந்துதான் கேப்டன் தோனியின் வேலை தொடங்கியது.

image

ஆட்டத்தின் 5வது ஓவரை வீசி 11 ரன்கள் கொடுத்திருந்த ஷர்துல் தாக்கூரை பந்துவீச அழைத்தார் தோனி. அதற்கு முன்பாக பிராவோவும், ஜடேஜாவும் பந்துவீசிக் கொண்டிருந்தனர். தோனி வைத்த நம்பிக்கையை காப்பாற்றி அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை. அதன் பிறகு தோனி, கொல்கத்தா அணிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஷர்துல் தாக்கூருக்கு அடுத்து உடனடியாக ஹசல்வுட்டை அழைத்தார். அந்த ஓவரிலும் ஒரு விக்கெட் வீழ்ந்தது. 

தொடக்கத்தில் இருந்தே தீபக் சாஹர் ரன் மழை பொழிந்து கொண்டிருந்ததால் டெத் ஓவர் அவர் வீசுவதை தவிர்த்து 14வது ஓவரை வீச அழைத்தார் தோனி. அது தீபக் சாஹருக்கு கடைசி ஓவர். 9 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் சாஹர். இடையில் ஜடேஜாவையும் பந்துவீச வைத்தார். அந்த வரிசையில் தான் ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன் விக்கெட்டுகள் வீழ்ந்தன. 

image

ஷர்துல் தாக்கூரையும், ஹசல்வுட்டையும் அடுத்தடுத்து பந்துவீச வைத்து ஓவருக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் வெற்றியும் உறுதியானது. 

10 ஓவர் வரை இருந்த நிலையில் அணி வீரர்களின் நம்பிக்கை சற்றே தளர்ந்து இருக்கும். கூட அணியில் நிகழ்ந்த தவறுகளும் கூட அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்திருக்கும். அவர்களை துவண்டுவிடாமல் உற்சாகப்படுத்தி நம்பிக்கையை இறுதிவரை தக்க வைக்க வேண்டியது ஒரு கேப்டனின் கடமை. அதனைத்தான் தோனியும் செய்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments