Advertisement

கொரோனா எதிரொலி: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகளை விதித்த சென்னை காவல்துறை

கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல், பொது இடங்களில் விழாக்களை கொண்டாடுதல் ஆகியவற்றிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கூட்டமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தனி நபர்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தனி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைத்து செல்லலாம் என்றும், அவ்வாறு வைத்துச் செல்லப்படும் சிலைகளை முறையாக கரைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர் முழுவதும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட இருப்பதாவும், கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments