
விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆன்லைன் நூதன மோசடியில் சிக்கிய துணை நடிகர் ஒருவர் லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
எவ்வித உடல் உழைப்புமின்றி விரைவாக பணக்காரராக வேண்டும். இதுதான் இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலானோரின் எண்ணம். இதை குறிவைத்து, ஆன்லைனில் ஏராளமான விளம்பரங்கள். அப்படி ஓர் விளம்பரத்தை நம்பி ஏமாந்து நிற்கிறார் சென்னை வட பழனியைச் சேர்ந்த துணை நடிகர் சீனிவாசன்.
திரைப்படங்களில் நடிப்பதோடு, திருமண நிகழ்ச்சிகளை யூ டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் பணி செய்து வந்த சீனிவாசனுக்கு, பத்து நிமிடத்தில் 200 ரூபாய், ஒரு நாளில் 8 ஆயிரம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. குறிப்பிட்ட பொருளின் மீது முதலீடு செய்தால், அதை பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் என்பதே மோசடிகாரர்களின் வலை.
சின்ன மீனைப் போட்டுதான், பெரிய மீனை பிடிக்க வேண்டும் என்ற இலக்கோடு வரும் மோசடி கும்பல், சீனிவாசன் முதலில் முதலீடு செய்த 500 ரூபாய்க்கு பதிலாக 850 ரூபாய் திருப்பி செலுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக 4,000 ரூபாய் முதலீடு செய்தவருக்கு, திருப்பி பணம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்ட போது, 8 விதமான டாஸ்க் உள்ளதாகவும், 8 ஆம் நிலை வரை உள்ள பொருட்களில் ஒரு மணி நேரத்தில் முதலீடு செய்தால் மட்டுமே, முதலீடு செய்த தொகையோடு முழு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி, 90,000 வரை செலுத்திய சீனிவாசனுக்கு இதுவரை எந்த பணமும் கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில், தியாகராய நகர் காவல் மாவட்ட சைபர் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அமேசான் போன்ற பிரபல நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி இது போன்ற மோசடி நடப்பதாக கூறும் சைபர் கிரைம் காவல் துறையினர், வேலை தேடும் இளைஞர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தக்கூறும் எந்த நிறுவனங்களையும் நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.
- சுப்ரமணியன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments