
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாள்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments