
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.04) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் (செப்.05) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக சேலம் ஏத்தாப்பூரில் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments