
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனையை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி சுகாதார அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும்18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடியே 64 ஆயிரத்து 32 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடத் தொடங்கியதில் இருந்து இதுவே ஒரே நாளில் அதிகப்பேருக்கு செலுத்தப்பட்ட எண்ணிக்கையாகும். இந்தியாவில் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் உத்தரப்பிரதேசத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் ஜூலை 21ஆம் தேதியன்று ஒரே நாளில் சுமார் 2 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதனை வரவேற்று ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், தடுப்பூசி போடும் பணியை வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பவர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments