Advertisement

வைர வரிகளின் சிற்பி; இலக்கிய உலகின் ஆளுமை; வைரமுத்து என்னும் பெருங்கவிஞர்

கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
 
கவிஞர் வைரமுத்து இன்றைய தேனி மாவட்டத்தில் (பழைய மதுரை மாவட்டம்), இன்று வைகை அணையின் நீர்ப்பரப்பில் மூழ்கிக் கிடக்கும் மெட்டூர் என்ற கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர் - தாயார் அங்கம்மாள். வடுகபட்டியில் பள்ளிக்கல்வி முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ படித்துத் தங்கப் பதக்கம் வென்றார். பேராசிரியர் டாக்டர் பொன்மணி வைரமுத்து இவர் மனைவி ஆவார். மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து என்று இரண்டு மகன்கள்.
 
தமிழ்நாடு அரசு ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது 1980ல் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும்.
 
தம் 18 வயதில் முதல் படைப்பாக ‘வைகறை மேகங்கள்’ என்ற மரபுக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இந்நூலுக்கு கவிஞர் கண்ணதாசன் அணிந்துரை எழுதியிருந்தார். ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை நூலை 28 வயதில் எழுதி, தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். கவிதைகள் மட்டுமின்றி நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதிப் சாதனை படைத்திருக்கிறார் வைரமுத்து.
 
என் பழைய பனை ஓலைகள், வானம் தொட்டுவிடும் தூரம்தான், என் ஜன்னலின் வழியே, மெளனத்தின் சப்தங்கள், கல்வெட்டுக்கள், கொடிமரத்தின் வேர்கள், கருவாச்சி காவியம், பாற்கடல், மூன்றாம் உலகப்போர், தமிழாற்றுப்படை உள்ளிட்ட 37 நூல்களை இதுவரை படைத்திருக்கிறார்.
 
குறிப்பாக வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் 2003-ல் ’சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. சாகித்ய அகாடமியால் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அண்மையில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாட்டின் சிறந்த புத்தகத்துக்கான ‘ஃபிக்கி (FICCI)’ விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளது.
 
image
இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷண்’ விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் ‘சாதனா சம்மாண்’ விருதும் பெற்றிருக்கிறார். இதுவரை 7,500 பாடல்கள் இயற்றியிருக்கிறார். திரைப்படப் பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர் தான். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை வென்றவரும் வைரமுத்து மட்டும்தான்.
 
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். இவருடைய படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், ரஷ்யன், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
 
அந்நாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் ‘கவி சாம்ராட்’ என்று அழைத்தார். அந்நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ‘காப்பியக் கவிஞர்’ என்று குறித்தார். அந்நாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, வைரமுத்துக்கு  ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் அளித்தார். "இன்றைக்கு தமிழை ஆண்டுக் கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்" என்று முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இவரைப் பாராட்டியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments