
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு மிகப் பெரிய அழுத்தம் இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரித்தீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.
India News ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர் "ரவி சாஸ்திரி மீது எப்போதும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. ரவி சாஸ்திரி தன்னுடைய பணியை சரியாக செய்யவில்லை எனக் கூறுவது தவறு. அவர் இப்போது வரை சரியாகவே தன் பங்கை செய்திருக்கிறார். ஆனால் எத்தனை கோப்பையை வென்றார் என்ற கேள்வி எழுப்பினால், இல்லை என்பதே நம் பதிலாக இருக்கும். ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி டி20 கோப்பையை வென்றால் இந்திய அணியின் பொறுப்பில் இருந்து அவரை யாராலும் நீக்க முடியாது" என்றார் ரித்தீந்தர் சிங் சோதி.

மேலும் பேசிய அவர் "அவர் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருந்தாலும், ஒரு ஐசிசி கோப்பையை வென்றுவிட்டால் அவருடைய இத்தனை ஆண்டுகால பணி நிறைவடையும். ஆனால் இப்போதுள்ள சூழல் இலங்கைக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக சென்று இருக்கிறார். மேலும் கூடுதலாக இரண்டு பேட்ஸ்மேன்கள் தேவை என்கிற இந்திய அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறியாக தெரியவில்லை. அதனால் இப்போது நடைபெற இருக்கும் இங்கிலாந்து தொடர் ரவி சாஸ்திரிக்கு அழுத்தம் தருவதாக இருக்கிறது" என்றார் ரித்தீந்தர் சிங் சோதி.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சென்று இருக்கிறது. இதே நேரத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக இலங்கை சென்று இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments