
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல், கூட்டணி, சசிகலா ஆடியோ விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்முறையாக கூடவுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்தும், தேர்தல் கூட்டணி பற்றியும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாகவும், அதிமுக 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில், அதனை சிறப்பாக கொண்டாடுவதற்கான திட்டமிடல் பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments