
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை முன்னிட்டு சாலைகளை சீரமைக்க மாநகராட்சி உதவி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 26ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் நிலையில் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற பணிகளை செய்ய மண்டல அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அரசின் எந்த விதிகளின்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதே போல விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூரும் குறிப்பிட்ட அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமான என வினவியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்ட விளக்கத்தில் இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள பிரமுகர் வருகையின் போது வழக்கமாக செய்யப்படும் பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். எனினும் உயர் அதிகாரிகள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக, தவறுதலாக புரிந்துகொள்ளப்படும் வகையிலும் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இவ்விளக்கம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே, மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையராக அயற் பணியிலிருந்து வரும் துணை ஆட்சியர் சண்முகம் விடுவிக்கப்படுவதாக உத்தரவு வெளியானது. இந்த நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments