
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலையில் குறளகம் முதல் தங்க சாலை சந்திப்பு வரை, ராயுபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை கடைகள் திறக்க அனுமதி இல்லை.

அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை உள்ள வணிக வளாகங்கள், கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதி இல்லை என்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments