
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பள்ளியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு தலைமையாசிரியர் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குகிறார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஊக்குவிக்க தலைமையாசிரியர் ரூபாய் 1000 வழங்கி வரும் சம்பவம் பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, கொரோனா இரண்டாவது அலை கணிசமாக குறைந்து வரும் சூழ்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது.

இதனால் கடந்த 14-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு உண்டு என்ற அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளியில் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பணம் வழங்கி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2021-2022 கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. இப்பள்ளியில் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் என்பவர் தனது சொந்த பணம் ரூ.1000-யை வழங்கி வருகிறார்.

படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களுடன் தனது சொந்த பணம் ரூ.1000-யை தலைமை ஆசிரியர் வழங்கினார். கடந்த ஆண்டு இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை தலைமை ஆசிரியர் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments