
பள்ளிகள் திறக்கப்படாத நாட்களில் இயக்கப்படாமல் உள்ள பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்கள் இயக்கப்படாமல் உள்ளது. ஆனால் அத்தகையை பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, எப்சி, இன்சூரன்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், பள்ளிகள் திறக்காத காலத்தில் இயக்கப்படாமல் உள்ள பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு அந்த குறிப்பிட்ட காலத்திற்கு வரிகள் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர். மேலும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அரசு முன்வர வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
இதனை முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments