Advertisement

14ஆம் தேதிக்குப் பின் ஊரடங்கு நீட்டிப்பா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதை அடுத்து, அமல்படுத்தப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் இம்மாதம் 7ஆம் தேதி வரை அமலில் இருந்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்ததால் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது வருகிற 14ஆம் தேதி காலை 6 மணி வரையில் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதுபோன்ற சூழலில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் என்ற அளவுக்கு பதிவான தொற்று தற்போது 17 ஆயிரம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது. அதே சமயம் கோவை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தினசரி தொற்று தொடர்ந்து ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது.

இந்த சூழலில் வருகிற 14ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments